Friday, April 30, 2021

அறம் வளர்த்த நாயகி

ஐயன் அளந்த இருநாழி நெல்லுடன் பூவுலகில் - காஞ்சி எனும் திருத்தலத்தில் - கம்பை ஆற்றின் கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது வளர்த்தனள் அம்பிகை என்பது ஐதீகம்.


அதனாலேயே - அம்பிகைக்கு அறம் வளர்த்த நாயகி  - ஸ்ரீதர்மஸம்வர்த்தனி எனும் திருப்பெயர் அமைந்தது. 

அம்பிகை அறம் வளர்த்தது காஞ்சியில் என்றாலும் அங்கே அவளுக்கு ஸ்ரீகாமாட்சி என்பதே திருப்பெயர். 
முப்பத்திரண்டு அறங்கள் என்பன எவையெல்லாம்!?..

1.வறுமையில் வாடுபவர்கள் பசியாறும்படி அன்னமிடுதல்.
2.நன்னெறிகளைப் போதிப்பவர்களின் பசியாற்றுதல்.
3.அறு சமயத்தார்க்கும் உணவிடுதல்.
4.பசுவுக்கு உணவு ஈதல். ( ஒரு கைப்பிடி புல் என்பது திருமூலர் சொல்)
5.சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குதல்.
6.இரப்போர்க்கு ஈதல்.
7.வலிய அழைத்து உண்ணக் கொடுத்தல்.
8.சிறு குழந்தைகளுக்குப் பசியாற்றுதல்.

9.எளியோர்க்கு மகப்பேறு பார்த்தல்.
10.அனாதைக் குழந்தைகளை வளர்த்தல்.
11.தாய்ப்பால் அற்ற குழந்தைகளுக்குப் பாலூட்டுதல்.
12.அனாதை சடலங்களுக்கு கிரியை செய்தல்.
13.பேரிடர்களில் தவிக்கும் மக்களுக்கு வாழ்வித்தல்.
14.வண்ணார்களுக்கு வாழ்வளித்தல்.
15.நாவிதர்களுக்கு நலம் விளைவித்தல்.
16.சுண்ணாம்பு அளித்தல்

17.நோய்க்கு மருந்தளித்தல்.
18.கண்ணாடி வழங்குதல்.
19.தகவல் அறிவித்தல்.
20.கண்நோய்க்கு மருந்தளித்தல்.
21.தலைக்கு எண்ணெய் அளித்தல்.
22.வறுமையுற்ற கன்னியர்  திருமணத்தை நடத்துதல் (கன்னிகா தானம்)
23.சிகை நீக்க உதவுதல்
24.பிறர் அறங்காத்தல்.

25.தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்.
26.திருமடங்கள் அமைத்தல்.
27.சாலைகள் அமைத்தல். பராமரித்தல்.
28.சோலைகள் அமைத்தல். பராமரித்தல்.
29.ஆ உரிஞ்சு கல் அமைத்தல் (விலங்குகள் உரசிக் கொள்ளும் தூண்).
30.தம்பதியர் உறக்கத்திற்கு இடையூறு அகற்றல்.
31.பசுமந்தையில் காளை சேர்த்தல்.
32.கொலைக் களத்தில் பொருள் கொடுத்து சிற்றுயிர்களைக் காத்தல்.

சற்றே மாறுபட்டாலும் பெரிய புராணத்திலும் அறப்பளீஸ்வர சதகத்திலும் முப்பத்திரண்டு அறங்கள் கூறப்பட்டுள்ளன.
அம்பிகை அறம் வளர்த்த வைபவத்தினை பற்பல புண்ணியரும் புகழ்ந்து போற்றியுள்ளளனர்.

காஞ்சியில் கோயில் கொண்ட குமரனை  , 

உமையாள் சேர்ந்தருள் அறம் உறு 
சீர் காஞ்சியில் உறைவோனே!.. (338) 

- என்று அருணகிரி நாதர் கும்பிட்டு வணங்குகின்றார்.

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே!.. 
(57)
- என்று அந்தாதியில் பாடிப் பரவும் அபிராமபட்டர் -

நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று
நித்தமும் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்திரண்டறம் வளர்க்கின்றவள்!..
 - என்று போற்றுவதும் சிந்திப்பதற்குரியன.

No comments:

Post a Comment