Tuesday, July 13, 2021

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில் ஸ்தல வரலாறு

#காஞ்சி #காமாக்ஷி #அம்மன் #கோயில் :-

உலகத்தின் மோட்சபுரிகளாக விளங்கும் அயோத்தியா, மதுரா, மயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா போன்ற ஏழு மோட்சபுரிகளில் ஒன்றாகவும், அவற்றில் மத்தியமானதாகவும் விளங்குவது காஞ்சி நகரமாகும். இந்த மோட்சபுரிகளில் ஒன்றான காஞ்சியில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் உள்ளது. 

இந்த சிறப்பு மிக்க காஞ்சியின் மத்தியில் ஜகன்மாதாவான காமாட்சி அம்பாள் கருணை வடிவாக பத்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது மிகவும் சிறந்தாகும்.

அம்பாள் உட்காந்து இருக்கின்ற ஆசனத்தின் சிறப்பு என்னவென்றால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் ஆகியோர் நான்கு கால்களாகவும், சதாசிவன் மேல் பலகையாகவும் இருக்க அதன் மேல் அம்பாள் பத்மாசனம் பூண்டு கருணை வடிவாக அமர்ந்திருக்கிறாள். 

அம்பாள் வீற்றிருக்கும் அந்த மண்டபம் காயத்ரி மண்டபமாகும். இங்கு காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரமும் (எழுத்து) 24 தூண்களாக உள்ளது. இந்த காய்த்ரி மண்டபத்தை வைத்துதான் அம்பாள் இங்கு வந்தது கணக்கிடமுடியாத காலம் என்று கூறுகின்றனர்.

காமாட்சி அம்பாள் கோயில் கோபுரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண தேவராயர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. காஞ்சிபுரத்தில் காமாட்சியே அகிலமுமாக இருக்கிறாள். "ஏகோ விஷ்ணுகோ: த்விதா சம்புகோ: திர்தா சக்திகி'' இதன் இந்த சமஸ்கிர்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால் காஞ்சிபுரத்தில் அனைத்து கோயில்களிலும் காமாட்சியே உற்சவ மூர்த்தி ஆவாள்.

இங்கே காமாட்சி அம்பாள் மூன்று சொரூபியாக உள்ளாள். பத்மாசனத்தில் சாந்த சொரூபியாகவும், எதிரில் ஸ்ரீ சக்கரத்தில் எந்திர சொரூபியாகவும், பக்கத்தில் பிலாசாகத்தில் காரண சொரூபியாகவும் உள்ளாள். இங்குள்ள ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

#அம்பாளின் #திருக்காட்சி : 

காமாட்சி அம்பாள் பத்மாசனத்தில் நான்கு கைகளோடு அமர்ந்து அருள்பாலிக்கிறாள். மேல் வலது கையில் பாசம் (கயிறு), இடது கையில் அங்குசம், கீழ் வலது கையில் 5 புஷ்பங்களோடும், கீழ் இடது கையில் கரும்பு வில்லோடும் காட்சி அளிக்கிறாள்.
உற்சவ காமாட்சி நடுவில் அம்பாளும், வலது மற்றும் இடது பக்கத்தில் சரஸ்வதியும் லட்சுமியும் இருக்கிறார்கள். 

#பங்காரு #காமாட்சி : 

காஞ்சியை முகலாய மன்னன் போரிட்டபோது, அவன் எடுத்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக முழுவதும் தங்கமாக இருந்த பங்காரு காமாட்சியை பத்திரமாக தூக்கி சென்று, அதனை உடையார்பாளையத்தில் வைத்தார்கள். தற்போது தஞ்சாவூரில் பங்காரு காமாட்சி இருந்து அருள்பாலிக்கிறார். 

#நாபி #ஸ்தானம் (#சந்தான #ஸ்தூபி): 

இங்கு மேலும் ஒரு சிறப்பு நாபிஸ்தானம் ஆகும். அம்பாளின் தாட்சாயினியின் தொப்புள் (நாபி) (ஒட்டியாணம்) விழுந்த இடமாகும். இந்த காயத்ரி மண்டபத்திலுள்ள 24 தூண்களில் ஒரு தூணில் இந்த நாபி உள்ளது. இந்த தூணிற்கு பெயர் சந்தான ஸ்தம்பம் என்று பெயர். 

இந்த இடத்தில் தரசத மகாராஜா வந்து புத்ரகாம இஷ்டி யாகம் செய்து அதன் பின்தான் ராம லட்சுமணர் பிறந்தார் என்று புராணம் கூறுகிறது. மேலும் ராம லட்சுமணருக்கு காமாட்சி அம்பாள்தான் குலதெய்வம் என்பது அயோத்தியிலுள்ள ஒரு கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

இன்றும் பக்தர்கள் வந்து தூணை சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

#அரூபலட்சுமி
-#சொரூபலட்சுமி: 

மகா விஷ்ணு பாற்கடலில் இருக்கும்போது கிண்டலாக லட்சுமி கருப்பு என்று கூற பெருமாள் கோபம் வந்து சொரூபமே இல்லாமல் இரண்டாக பிளந்து கூன் விழுந்து காணப்படுவாய் என்று சாபம் கொடுக்கிறார்.

அந்த சாப விமோச்சனம் வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் வீற்றிருக்கும் காயத்ரி மண்டபத்தில் தபஸ் இருக்கிறாள். பிறகு லட்சுமி தேவி சாப விமோச்சனம் நீங்கி சொரூப லட்சுமியாக நின்றபடி கைகூப்பி (பத்தாஞ்சலியா) வணங்கிய கோலத்தில் காட்சியளிக்கிறார். 

இதுபோன்று நின்ற கோலம் வேறு எங்கும் காண இயலாது. இங்கு வரும் பக்தர்கள் லட்சுமி தேவி தபஸ் செய்து எப்படி பாப விமோச்சனம் பெற்றாரோ அதுபோல தாங்கள் குங்கும பிரசாதம் வாங்கி அரூப லட்சமி மீது சாதி பேதமின்றி ஆண் பெண் பாகுபாடின்றி அனைவரும் தாங்களே தொட்டு குங்குமம் பூசி தாங்கள் செய்த பாபத்திற்கு விமோச்சனம் வேண்டுகின்றனர். 

வேறு எந்த கோயிலிலும் சுவாமி விக்ரகங்களை பக்தர்கள் தொடமுடியாது. இங்கு இது தனி சிறப்பாகும். இவ்வாறு அம்பாள் கைகூப்பி நின்ற கோலத்தை மகாவிஷ்ணு திருட்டுத்தனமாக மறைந்திருந்து பார்க்கிறார்.

ஆகவே அவருக்கு திருக்கள்வர் என்றும், ஆதிவராக பெருமாள் என்றும் பெயர் என்று 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் இது குறித்து கூறியுள்ளது. வைஷ்ணவர்கள் இன்றும் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். 

#அன்னபூரணி : 

அம்பாள் சன்னதியைவிட்டு வெளியே வந்தால் காசி அன்னபூரணி ஒரு கையில் அன்ன பாத்திரத்துடனும், ஒருகையில் கரண்டியுடனும் காட்சி தருகிறார். அன்னபூரணியை தரிசித்துவிட்டு அதன் அருகிலுள்ள பிட்ச துவாரத்தில் "பவதி பிட்சாந்தேகி'' அதாவது நிரந்தரமாக உணவு கிடைக்க பக்தர்கள் வழிபடுகின்றனர். 

#சரஸ்வதி : 

மேலும் அங்கே அஷ்ட புஜங்களுடன் அம்பாளின் மந்திரினி என்றும் மாதங்கி என்றும் ராஜ சியாமளா என்றும் அழைக்கப்படும் சரஸ்வதி தேவியார் வீற்றிருந்து கல்விச்செல்வங்களை வழங்கி வருகிறார். அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சரஸ்வதி சன்னிதிக்கு வந்து வழிபட்டு கல்விச் செல்வங்களை பெற்றுய்கின்றனர். 

சரஸ்வதி சன்னிதிக்கு அருகே 1944ல் மகா பெரியவர் அம்மனின் பாதுகையை பங்காரு காமாட்சி ஞாபகர்த்தமாக பிரதிஷ்டை செய்தார். அதற்கு இன்றும் பூஜை நடைபெற்று வருகிறது. 

#தர்மசாஸ்தா : 

தேவியை தரிசித்துவிட்டு வெளியே வந்தால் தர்ம சாஸ்தா பூர்ணா, புஷ்கலா என்ற இரு மனைவியருடன் காட்சிதருகிறார். தமிழகத்தை ஆண்டு வந்த கரிகாலச்சோழன் இங்கு வந்து இங்குள்ள தர்ம சாஸ்தாவிடம் பூச்செண்டு வாங்கி சென்று இமயமலை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதாக புராணம் கூறுகிறது. 

#ஆதிசங்கரர் : 

ஆதிசங்கரர் பல இடங்களுக்கு சென்று மடங்களை ஸ்தாபித்துவிட்டு இறுதியில் காஞ்சிபுரம் வந்தார். இங்கு வந்து காமகோடி பீடம் ஏற்படுத்தி இங்கேயே சர்வஞ்ன பீடம் (முக்தி) அடைந்து அங்கேயுள்ள பிலாகாசத்தில் அம்மனுடன் ஐக்கியம் ஆகிவிட்டார். 

அவர் வருகை தந்தபோது ஆதி காமாட்சி அம்பாள் மிகவும் உக்கிரமாக இருந்தார்.அப்போது ஆதிசங்கரர் வந்து ஸ்ரீ சக்கரத்தை அவருடைய கையாலேயே உருவாக்கி பூஜை செய்து அம்பாளை சாந்த சொரூபியாக மாற்றினார்.

இங்கு அம்பாளுக்கு எந்த உற்சவம் நடந்தாலும் ஆதிசங்கரருக்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது. ஆதிசங்கரர் சிவபெருமானின் மறு உருவமாக வந்தவர். அம்பாள் வீதி உலா வரும்போது ஆதிசங்கரர் அம்பாளை பார்த்து செல்ல அம்பாள் பின் வீதி உலா புறப்படுகிறார்.

ஆதி சங்கருடைய பரம்பரை 70-வது பீடாதிபதிதான் இன்னமும் தர்மகர்த்தாவாக இருந்து வருகின்றனர். மேலும் ஆதிசங்கரருக்கு ஆறு மதத்தை தோற்றுவித்தவர் என்று பெயரும் உண்டு. அந்த ஆறு மதம் (ஷண்மதம்) என்பது சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், கானாபத்யம், சௌரம் என்பனவாகும்.

சைவம்-ஈஸ்வரன், வைணவம்-மகாவிஷ்ணு, சாக்தம்-காளிகாம்பாள், கௌமாரம்-சுப்பிரமணியர், கானாபத்யம்-விநாயகர், சௌரம்-சூரியனர் ஆகும். 
எல்லா மதங்களுக்கும் மூலம் அம்பாள் என்பதற்கு அடையாளமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு ராஜ வீதிக்குள் சைவத்திற்கு கௌசிகேஸ்வரர் கோயிலையும், வைணவத்திற்கு உலகளந்த பெருமாள் கோவிலையும், சாக்தத்திற்கு காளிகாம்பாள் கோவிலையும், கௌமாரத்திற்கு குமர கோட்ட முருகர் கோவிலையும், காணாபாத்யத்திற்கு சங்குபாணி விநாயகர் கோவிலையும், சௌரத்திற்கு மகா காளேஸ்வரர் கோவிலிலுள்ள சூரியனின் சன்னிதியையும் உள்ளது. 

ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடம் அடைந்தார் என்பதற்காக அவருடைய திருஉருவ சிலையும், சன்னிதியும் கோவிலில் அமைந்துள்ளது. 

#துண்டீர #மகாராஜா : 

துண்டீர மகாராஜா காஞ்சிபுரத்தை ஆண்டு வந்தார். ஆகவே காஞ்சி பிராந்தியத்திற்கு தொண்டை மண்டலம் என்று பெயர். அவர் அம்பாளை பிரார்த்திக்க அம்பாள் சொர்ணமழை பெய்ய செய்தார் என்று கூறப்படுகிறது. இன்றும் உர்ச்சவர் சன்னிதிக்கு எதிரில் அவர் சிலை உள்ளது. 

#திருக்குளமும், #பெருமாள் #சன்னதியும்: 

திருக்குளத்திற்கு பஞ்ச கங்கை என்று பெயர். ஈஸ்வரனின் தலை முடியிலிருந்து உற்பத்தியாவதால் பஞ்ச கங்கை என்று பெயர்பெற்றது. இந்த திருக்குளத்தில் ஆண் பூதம், பெண் பூதம் என இரண்டு பூதங்கள் பக்தர்களை இம்சித்து வந்தது. இதைப்பார்த்த அம்பாள் இந்த பூதங்களை வதம் செய்தார். 

வதம் செய்தபோது பூதத்திலிருந்து வந்த ரத்தத்திலிருந்து பல பூதங்கள் தோன்றின. இதை பார்த்த மகாவிஷ்ணு அந்த பூதங்களின் மீது நின்றும், படுத்தும், இருந்தும் வதம் செய்தார். திருக்குளம் அருகே பெருமாள் நின்ற, இருந்த, படுத்த கோலத்தில் சன்னதி உள்ளது (திருக்குளம் அருகில் உள்ளது)

பங்குனி உத்திரம் நேரத்தில் 3 நாட்கள் அம்பாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 

#பூஜை #முறைகள் : 

துர்வாச முனிவர் எழுதிய சௌபாக்ய சிந்தாமணி எனும் புத்தகத்தின் அடிப்படையில்தான் இங்கு அம்பாளுக்கு பூஜைகள், உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இங்கு பூஜைகளை ஏழு பிரிவுகளை (கோத்திரங்களை) சேர்ந்தவர்கள் மட்டும்தான் பூஜை செய்ய முடியும். வைதீக முறைப்படி பூஜை செய்யப்படுகிறது. (பள்ளி அறைக்கு எதிரில் துர்வாசர் சன்னதி உள்ளது)

#பைரவர் : 

வெளிபிரகாரத்தில் கோபுரத்திற்கு அருகில் பைரவர் சன்னதி உள்ளது. கோவிலின் காவல் தெய்வம் பைரவர் ஆவார். கோவிலின் முடிவு பூஜை பைரவருக்குதான் நடத்தப்படுகிறது. அவருக்கு பூஜை முடிந்ததும் சாவிக்கொத்தை பைரவர் சன்னதியில் வைத்து எடுத்துச்செல்வார்கள். பைரவர் பரமேஸ்வரரின் அவதாரம் ஆவார். 

#விஷேச #தினங்கள் : 

காமாட்சி அம்பாளுக்கு நவராத்திரி 9 நாட்களும் மிகவும் உகந்த விஷேச தினங்களாகும். இதனை சாரதா நவராத்திரி என்று அழைப்பார்கள். யாகசாலை பூஜை உண்டு. பகலில் நவாவரண பூஜையும் உண்டு. இந்த நவாவரண பூஜை ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவு நடத்தப்படுகிறது. 

மாசி மாதத்தில் பிரம்ம உர்ச்சவம் நடைபெறும். காலை மாலை இரண்டு வேளைகளிலும் அம்பாள் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்க அருள்பாலிக்கிறார் .ஐப்பசி பூரம் அம்பாள் அவதரித்த நாள் ஆகும். பிலாகாசனத்திலிருந்து அம்பாள் வாயு வடிவமாக அவதரித்த நாள் ஐப்பசி பூரம் ஆகும். அன்றும் மிகவும் விஷேச தினமாகும். 

மாசி மகம் அன்று விசுவரூப தரிசனம் மிகவும் விஷேச தினமாகும். பண்டாசுரன் என்ற அரக்கன் எந்த பெரியவர்களாலும் தன்னை அழிக்க கூடாது என்று வரம் பெற்று அனைவரையும் தும்சம் செய்து வந்தான். அப்போது அம்பாள் சிறு பாலகனாக (சிறுமியாக) வந்து அரக்கனை வதம் செய்தாள்.

அப்போது அங்கு வந்த ஈஸ்வரன் நீ சிறு பெண்ணாக இருக்கிறாயே யார் நீ? என்று கேட்க அதற்கு சிறுமி மாசி மகம் அன்று வந்து பார். நான் யாரென்று தெரியும் என்று கூறினாள். மாசி மகத்தன்று சிறுமியாக இருந்த அம்பாள் விசுவரூபம் எடுத்து தரிசனம் கொடுத்தாள். ஆகவே அன்று விஷேச தினமாகும். 

#பூஜை #நேரம் : 

காலை 5 மணி முதல் மதியம் 12.30 வரை. மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. பிரதி வெள்ளிக்கிழமையும் உர்ச்சவ மூர்த்தி அம்பாள் தங்க தேரில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்திற்குள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சித்தருகிறாள். 

சித்திரை 1-ந் தேதி அன்று தங்க தேரில் நான்கு ராஜ வீதிகளிலும் திருவீதிஉலா வந்து அருள்பாலிக்கிறாள். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்தான். இந்த தங்கதேரை தர்மகர்த்தாவான ஜெயேந்திரர் மகா பெரியவருக்கு செய்த கனகாபிஷேகத்தில் வந்த தங்க காசுகளை வைத்து உருவாக்கினார். 

#ஸதல #விருட்சம் : 

சம்பக விருட்சம் ஆகும். தற்போது வில்வமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. இத்தனை சிறப்பு மிக்க சாந்த சொரூபியான அம்பாளை நாளும் தரிசித்து துன்பம் நீங்கி வாழ்வில் இன்பம் கண்டு வாழலாம். 

#போக்குவரத்து #வசதி : 

சென்னையில் இருந்து #காஞ்சிபுரம் செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.